உள்ளூர் செய்திகள்

மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு சேர்க்கைக்கு கோரிக்கை

தேனி: தேனி மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் இருந்து மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆண்டிபட்டி தேக்கம்பட்டியில் அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படித்த மாணவர்கள், மாணவிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்தவர்கள், தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட 5 அடிப்படைகளை வைத்து இப்பள்ளிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மேல்நிலைக் கல்வியுடன் நீட், ஜே.இ.இ., கிளாட், ஜிப்மர் நுழைவுத்தேர்வு, கியூட் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு படித்த 33 மாணவர்கள் கடந்தாண்டு பல்வேறு நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று டில்லி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் மத்திய அரசின் பல்கலைகளில் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் 5 ஏக்கர் இடம் ஒதுக்கி உள்ளது. வகுப்புகள் இன்னும் பாலிடெக்னிக் வளாகத்தில் நடந்து வருகிறது. விடுதியும் அதே பகுதியில் செயல்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் 9ம் வகுப்பு சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் துவங்குகிறது. அதே போல் தேனி மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் 9ம் வகுப்பு சேர்க்கை துவங்க வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்