உள்ளூர் செய்திகள்

சிறுபான்மை மாணவர்களின் நிலைமை என்ன?

ஓசூர்: தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும், 7,000 சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ள நிலையில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத கடிதம் கொடுத்த, 133 மாணவ, மாணவியரின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தால், நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்து, பொதுத்தேர்விற்கு தயாராகி வரும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சிறுபான்மை மொழி மாணவ, மாணவியரை, அவர்களது தாய் மொழியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவ, மாணவியரை அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி அளித்தது. ஆனால், ஓசூர் கல்வி மாவட்டத்தில் கடிதம் கொடுத்த, 133 தெலுங்கு மாணவ, மாணவியரை மட்டும் தேர்வுத்துறை இயக்குனரகம் அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 9ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனிதாபிமான அடிப்படையில், 133 மாணவ, மாணவியரை அவர்களது தாய்மொழியில் தேர்வு எழுத, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நாளை 10ம் வகுப்பு தேர்வு துவங்கும் நிலையில், 133 தெலுங்கு மாணவ, மாணவியர் தாய் மொழியில் தேர்வு எழுத அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அனுமதி கொடுக்காததால், தமிழ் மொழியில் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்