மதிப்பெண் மட்டும் வாழ்க்கையல்ல
திருப்பூர்: மதிப்பெண் மட்டுமே வாழ்கையல்ல. தேர்வில் தோல்வி ஏற்பட்டால், மனம் தளரக்கூடாது என அமைச்சர் சாமிநாதன் அறிவுரை வழங்கினார்.திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) தேவராஜன் வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:கடந்த முறை பொதுத்தேர்வில் நம் மாவட்ட மாணவர்கள் சாதித்து காட்டிய போது, மகிழ்ந்தேன். இந்த முறையும் இன்ப அதிர்ச்சி தருவார்கள் என எதிர்பார்த்துள்ளேன். உடல்நலம், ஆரோக்கியத்துடன் மாணவர் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு சைக்கிள் வழங்குகிறது. சைக்கிளை பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.மதிப்பெண் மட்டுமே வாழ்கையல்ல. தேர்வில் தோல்வி ஏற்பட்டால், மனம் தளரக்கூடாது. குறிப்பாக, மாணவியர் தவறான முடிவுகளை எக்காரணம் கொண்டு யோசிக்க கூடாது. ஆசிரியர்கள் எப்போதும் நல் வழியை தான் காட்டுவார்கள். எனவே, படிப்பில் கவனமுடன் இருங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் திவாகரன், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.