முதல்வர், பேராசிரியர்களிடம் 7 மணி நேரம் விசாரணை
மதுரை: மேலுார் அரசுக்கல்லுாரியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக முதல்வர், பேராசிரியர்கள் தரப்புக்கு இடையே சுமூகமான நிலைப்பாடு இல்லை. இதன் எதிரொலியாக முதல்வர் தனிப்பிரிவு, துறை இயக்குநர், இணை இயக்குநர் உள்ளிட்டோருக்கு பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் குணசேகரன் தலைமையில் விசாரணை நடந்தது. முதல்வர் மணிமேகலா தேவி உரிய விளக்கம் அளித்தார்.பேராசிரியர்கள் சிலர் நாங்கள் அளித்த புகாருக்கு பின் தான் மாணவர்களிடம் கூடுதலாக பெறப்பட்ட தொகை கல்லுாரி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதுவரை அப்பணம் யாரிடம் இருந்தது என விசாரிக்கவில்லை. ஒருதலைப்பட்சமாக இருந்தது என்றனர். சில பேராசிரியர்கள் 'விசாரணை நடுநிலையுடன் நடந்தது' என்றனர்.இணை இயக்குநர் குணசேகரன் கூறுகையில், புகார்கள் அடிப்படையில் நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டது. இதன் விவர அறிக்கை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.