175 சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு
சென்னை: அரசு உதவி பெறும், 175 சிறப்பு பள்ளி களில், 5,725 மாணவர்களுக்கு, மதிய உணவை அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து அடுத்த மாதம் முதல் வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி, சமூக நலத்துறைக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜூன் முதல் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும், சத்துணவு வழங்கும் வகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் வாயிலாக விபரங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள், 175 சிறப்பு பள்ளிகளில், காலை வந்து மாலை செல்லும் 5,725 மாணவர்களுக்கு, மதிய உணவு தேவை என்று தெரிவித்தனர்.அந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல், அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து, உரிய நேரத்தில் மதிய உணவை பாதுகாப்பாக எடுத்து செல்லவும், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு உணவை முறையாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விபரங்கள், தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.