| ADDED : பிப் 25, 2024 01:10 AM
சென்னை: நாளை மறுதினம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' யாத்திரையை நிறைவு செய்ய, பல்லடத்தில் மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது; அதில் மோடி பங்கேற்கிறார்.இந்த பொதுக்கூட்டம், தமிழக தேர்தல் பிரசாரத்தின் துவக்கம் என்கின்றனர், சீனியர் பா.ஜ.,வினர். பிரதமர் இங்கு என்ன பேசப் போகிறார் என்பதை அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.தமிழக அரசியல் நிலை குறித்து பிரதமர் அலுவலகம் நன்றாக ஆய்ந்து, சில குறிப்புகளை தயார் செய்துள்ளதாம்.பிரதமரும், தமிழகம் தொடர்பாக, தான் என்ன பேச வேண்டும் என்பது குறித்த சில விஷயங்களை, உரை தயாரிக்கும் குழுவிடம் தெரிவித்துள்ளாராம்.'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பது முடிவாகி விட்ட நிலையில், இரண்டு திராவிட கட்சிகளையும் தன் உரையில் கடுமையாக விமர்சிப்பார் மோடி' என சொல்லப்படுகிறது.'கடந்த 70 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி நடத்தியது போதும்... பா.ஜ.,விற்கு வாய்ப்பு தாருங்கள்' என கூறுவதுடன், 'தி.மு.க., அமைச்சர்களின் ஊழல், அவர்களுக்கு எதிரான பணப் பரிமாற்ற வழக்குகள் என, பல விஷயங்களை தன் பேச்சில் பிரதமர் குறிப்பிடுவார்' என்கின்றனர்.