புதுடில்லி: துணை ஜனாதிபதியாக தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 'இண்டி கூட்டணியின் சார்பாக, திருச்சி சிவா நிறுத்தப்படலாம்' என, மீடியாவில் செய்திகள் வெளியானாலும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.சிவாவின் பெயர் எப்படி முதலில் வெளியானது? 'இதற்கு காரணம் சரத் பவார் தான்' என்கின்றனர். ராதாகிருஷ்ணன் பெயரை பா.ஜ., அறிவித்த உடனேயே, சிவாவின் பெயரை சிபாரிசு செய்துள்ளார் பவார்.'ஒரு தமிழரை எதிர்த்து, இன்னொரு தமிழர் போட்டியிட்டால் தி.மு.க.,விற்கும், இண்டி கூட்டணிக்கும் நல்லது' என, பவார் கூறினாராம். இதையடுத்து, இந்த செய்தி மீடியாவில் கசிந்தது; சிவா உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். டில்லி மீடியா நண்பர்களிடம், 'இந்த செய்தியை பெரிதுபடுத்துங்கள்' என அவர் சொல்ல, டில்லி வட்டாரங்களில் சிவா ஹீரோவாகிவிட்டார்.பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், கனிமொழியும் நெருங்கிய தோழிகள். சுப்ரியாவிற்கு கனிமொழி போன் செய்து, 'எதற்கு சிவாவின் பெயரை அப்பா சிபாரிசு செய்தார்; எங்களை கேட்டிருக்க வேண்டாமா?' என, கேட்டாராம். இந்த விவகாரம் குறித்து எதுவுமே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாதாம். சிவாவின் பெயர் மீடியாவில் வந்ததும், 'ஷாக்' ஆனாராம் முதல்வர்.'விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தான் எங்கள் வேட்பாளர்' என, தி.மு.க., தரப்பில் சொல்லப்பட, அண்ணாதுரையின் பெயரும் மீடியாவில் இடம் பெற்றது. கடைசியில், ஆந்திராவை சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி இண்டி கூட்டணியின் வேட்பாளர் ஆனார். 'முதல்வர் ஸ்டாலினின் பிடியில் தி.மு.க., இயங்குகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறதே' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.