'மன்னார் வளைகுடா பகுதியில், கடல் பசுக்கள் எனப்படும் அரியவகை உயிரினங்களை பாதுகாக்காமல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் விடுவதா' என, தமிழக காங்., - எம்.பி., கேள்வி எழுப்பியதால், மத்திய அமைச்சர் ஆவேசமானார். லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின்போது திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் பேசியதாவது: கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த மன்னார் வளைகுடா பகுதி, 'பயோ ஸ்பியர்' என மிகுந்த சென்சிடிவ் மண்டலமாக கருதப்படுகிறது. முதல்வர் கடிதம்
ஆனால், அங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ள இடம், அந்த பகுதிக்குள் வராது என அமைச்சர் கூறுகிறார். மிகுந்த சென்சிடிவான பகுதி என்றானபின், அருகில் தோண்டுவது ஏற்புடையதா? தமிழக முதல்வர் கடிதம் எழுதியும், தமிழக அரசிடம் எவ்வித ஆலோசனையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அதற்கு பதிலளித்து, பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறியதாவது: கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழல் குறித்தெல்லாம் உங்களைவிட மிகவும் கவலைப்படுகிறவர்கள் நாங்கள்தான். 'வெறும் டெண்டர் விட்டதாலேயே, 'துளையிடும் பணிகளை துவங்குங்கள்' என ஒப்பந்ததாரர்களிடம் கூறிவிட்டதாக அர்த்தமாகி விடாது. 'துளையிட, சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்; கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி வேண்டும்; மாநில அரசின் அனுமதியும் அவசியம். இதற்கு பின்தான் பணிகள் துவங்கும்' என, தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு கூறிய அமைச்சர், திடீரென தன் குரலை உயர்த்தி, ஆவேசமாக பேச துவங்கினார். உடனே, சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு, “இவ்வளவு கோபம் அவசியம் இல்லையே, சற்று நிதானம் காட்டுங்கள்,” என்றார். இதையடுத்து, ஹர்தீப்சிங் புரி, “பார்லிமென்ட்டில், இப்படி பேசுவது கூட ஒருவகையான ஸ்டைல்” என சமாளித்தார். டெண்டர்
பின்னர், “நான், தமிழகத்துடன் நீண்ட தொடர்பு கொண்டவன். மிக சொற்ப அளவில்தான், தினசரி உற்பத்தி இருக்கும். கடல் உயிரினங்கள் வசிக்கும் சென்சிடிவ் மண்டலம் பகுதிக்கே செல்ல மாட்டோம்,” என்றார். உடனே குறுக்கிட்ட சசிகாந்த் செந்தில், “அறிவிப்பு மட்டும்தான் செய்துள்ளோம். மற்ற வேலைகள் துவங்கியா விட்டோம் என அமைச்சர் கேட்கிறார். இதுவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தால், இப்படி அறிவிப்பு வெளியிட முடியுமா? கண்களால் பார்க்க முடியாத பகுதி என்பதால், துணிச்சலுடன் டெண்டர் அறிவிப்பு வெளியிடுவீர்களா,” என்றார். மீண்டும் கோபத்துடன் எழுந்த ஹர்தீப்சிங் புரி, “கடல் உயிரிகள் மண்டலத்திலிருந்து, அப்பால் இருக்கும் பகுதியைத்தான் இறுதி செய்திருக்கிறோம். மாநில அரசு அனுதி தராமல், துளையிட மாட்டோம் என எத்தனை தடவை கூறுவது,” என்றார். சபையில் பதற்றம் அதிகமாகவே, “அமைச்சரோ, எம்.பி.,யோ, யாராக இருந்தாலும், தணிந்த குரலில் பேச வேண்டும்,” என சபாநாயகர் கூறினார். கடல் பசுக்கள்
பின், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், “மன்னார் வளைகுடா பகுதியில், கடல் பசுக்கள் நிறைந்து காணப்படுகிறது. சாதாரணமாக, கண்ணாலேயே அவற்றை அங்கு பார்க்க முடியும். அவை அழிந்து வரும் அரியவகை உயிரினங்கள். ஆகவே, அந்த பகுதியில் துளையிடுவதை நினைக்கவே கூடாது,” என்றார். அதற்கு அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, “அதற்கான அனுமதியை, மத்திய அரசோடு சேர்ந்து, மாநில அரசும்தான் தர வேண்டும்,” என்றார். இந்த விவாதம் முடியும் வரையில், லோக்சபாவில் கடும் பதற்றம் காணப்பட்டது. - நமது டில்லி நிருபர் -