திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி நேற்று 144 தடையை மீறி கோயிலுக்குள் ஒன்று கூடிய பக்தர்கள் 'குன்றத்துமலை குமரனுக்கே', 'வீரவேல் வெற்றிவேல்' என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறியதாக நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்திலும், வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டனர்.திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு வெட்டி உயிர்ப்பலி கொடுக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோயிலின் புனிதத்தன்மையை பாதிப்பதாக கூறி ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மலையை 'சிக்கந்தர் மலை' என்று கூறி சில அமைப்புகள் ஆக்கிரமிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து முன்னணி, நேற்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் அனுமதி மறுத்தனர். மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு முதலே திருப்பரங்குன்றத்தில் வசிக்காதவர்களை போலீசார் வெளியேற்றினர். எல்லைகளில் சோதனை
போலீஸ் கமிஷனர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையில் 5 எஸ்.பி.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் நேற்று காலை முதலே மதுரை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து தெருக்களின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை நகர், மாவட்ட எல்லைகளில் வெளியூர் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. மதுரை ஆதினத்திற்கும் தடை
அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து ரயிலில் திருப்பரங்குன்றம் வந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திலும், வீட்டிலும் சிறை வைக்கப்பட்டனர். மதுரை ஆதினமும் மடத்தை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டது. கோயிலுக்குள் ஆர்ப்பாட்டம்
அதேநேரம் பக்தர்கள் தனித்தனியாக திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சென்று வழிபட போலீசார் அனுமதித்தனர். அப்படி சென்று தரிசனம் செய்தவர்கள் மதியம் 12:30 மணிக்கு சஷ்டி மண்டபம் வழியாக வெளியே வந்தனர். அப்படி வந்த 500க்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா திருமண மண்டபம் முன்பு அமர்ந்து 'குன்றத்து மலை குமரனுக்கே' 'வீரவேல் வெற்றி வேல்', 'காப்போம் காப்போம் முருகன் மலையை காப்போம்' என கோஷமிட்டனர். இதில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.இதை எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சியுற்று உடனடியாக மண்டபத்திற்கு வந்து வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கோஷமிட்டவாறே ஓட, அவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு வந்து போராட்டத்தில் தாங்களாக முன்வந்து பங்கேற்ற துாத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். பக்தர் ஒருவர் கன்னத்தில் 16 அடி நீளமுள்ள வேல் குத்தி கோயிலுக்கு நடைபயணமாக வந்தார். கோயில் வரை அனுமதித்த போலீசார் பின்னர் வேலை அகற்ற செய்து அவரை கைது செய்தனர்.நேற்று மதியம் வரை மொத்தம் பெண்கள் உட்பட 485 பேரும், திருப்பரங்குன்றத்திற்கு தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட 731 பேரும் கைது செய்யப்பட்டனர்.திருப்பரங்குன்றத்தில் டவுன் பஸ்கள் அனுமதிக்கப்படாததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் 'பாதயாத்திரையாக' வந்தனர்.மதியம் 3:15 மணிக்கு கோயில் முன் நடந்த திடீர் போராட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், திருச்செங்கோடு, துாத்துக்குடி பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் கூறுகையில், 'போலீசார் தடுத்தாலும் ஹிந்துக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திருப்பரங்குன்றத்திற்கு திரண்டு வந்து போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோம்' என்றனர்.
விடுவிப்பு
முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். மதுரை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வாகனங்களில் புறப்பட்டு பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
போலீஸ் - எச்.ராஜா வாக்குவாதம்
பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடி பண்ணை வீட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல காரில் புறப்பட்டார். டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார் அவரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காரிலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எச்.ராஜா காத்திருந்தார். பின் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பையடுத்து எச்.ராஜா அங்கிருந்து சென்றார்.
நீதிபதிகள் கேள்வியால் ஆடிப்போன அரசு தரப்பு!
திருப்பரங்குன்றம் மலையை காக்க ஹிந்து அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, போடப்பட்ட 144 தடை உத்தரவை நீக்கக் கோரியும், போராட்டத்துக்கு அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மதுரை சுந்தரவடிவேல் தாக்கல் செய்த அவசர பொதுநல மனு:மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசம் திருவிழா ஜன.29 ல் துவங்கி பிப்.11 வரை நடைபெறுகிறது. சிலர் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரமிக்க மற்றும் ஆடு, கோழிகளை பலியிட முயற்சித்து திட்டமிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர். இதிலிருந்து ஹிந்துக்களின் புனிததலமான மலையை பாதுகாக்க வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் பிப்.4 ல் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. பாரபட்சமாக போலீசார் அனுமதி மறுத்தனர்.பிப்.3 முதல் பிப்.4 வரை போராட்டம், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்படுகிறது; இரு நாட்களிலும் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் பிப்.2 ல் உத்தரவிட்டார். இதனால் பக்தர்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது. 144 தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டும். தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்கக்கூடாது என கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.மதுரை முருகன் தாக்கல் செய்த மற்றொரு அவசர பொதுநல மனுவில், ''திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் அவர்களின் வாகனங்களை தடுக்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இதே போல, ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச் செயலர் கலாநிதி மாறனும் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ''திருப்பரங்குன்றம் கந்தர் மலையை காக்க, பிப்.4 ல் மதியம் 3:00 மணிக்கு ஹிந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தனர். அதை ரத்து செய்து அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்,'' என கலாநிதி மாறன் கோரியிருந்தார்.மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு, ''144 தடையுத்தரவு அமலில் உள்ளபோது ஒரு (அண்ணாதுரை நினைவுநாள்) ஊர்வலத்திற்கு எப்படி அனுமதியளிக்கப் பட்டது,'' என கேள்வி எழுப்பியது. பின், ''பழங்காநத்தத்தில் பிப்.4 ல் மாலை 5:00 முதல் 6 :00 மணிவரை அமைதியான முறையில், ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தலாம். எவ்வித ஆட்சேபகரமான கோஷங்களையும் எழுப்பக்கூடாது. அதை, போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால் அதற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர் பிப்.19 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அந்த உத்தரவின்படி, ஹிந்து அமைப்பினர் மதுரை பலங்காநத்தத்தில் போராட்டம் நடத்தினர்.