| ADDED : ஜூன் 12, 2024 11:29 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று பேரிடம் 3.11 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மொபைல் போனில் குறைந்த விலையில் ஷூ விளம்பரம் வந்தது. அதை பார்த்து, ஆன்லைன் மூலமாக ஷூ ஆர்டர் செய்தார். அவருக்கு தவறான ஷூ வந்தது. வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மர்ம நபர் வங்கி விபரங்களை பதிவு செய்யுமாறு கூறினர். அதனை தொடர்ந்து, வங்கி விபரங்களை கொடுத்த அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 2.31 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.அதே போல், புதுச்சேரியை சேர்ந்தவர் எடிசன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, அவர் 35 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். ஆனந்தலட்சுமி என்பவரிடம் வீட்டுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தார். முன்பணம் அனுப்ப வங்கி விபரங்களை பதிவு செய்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இது குறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.