| ADDED : ஆக 12, 2024 04:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சி துறை அலுவலகத்தில் நடந்தது. இயக்குனர் சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நலவழித்துறை உதவி இயக்குனர் வசந்தகுமாரி, புதுச்சேரியில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். சென்னை பெருநகர மாநகராட்சியின் நோய் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி செல்வகுமார், ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் புதிய தொழில்நுட்பம், கொசுவை ஒழிக்க சென்னை மாநகராட்சி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மத்திய அரசின் வெக்டர் கட்டுப்பாட்டு துறையின் மருத்துவர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில், கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ள கழிவுநீர் மற்றும் தேங்கியுள்ள பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, துாய்மையை பராமரிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, கழிவு நீர் வாய்க்கால்களை உள்ளாட்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைப்புகள் இணைந்து துார்வாருவது என முடிவு செய்யப்பட்டது.உள்ளாட்சித் துறை துணை இயக்குனர்கள் சவுந்தரராஜன், ரத்னா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.