| ADDED : ஆக 21, 2024 06:35 AM
புதுச்சேரி : கொல்கட்டாவில் பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, ஜிப்மரில் 8வது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் நேற்று 8வது நாளாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக போதிய டாக்டர்கள் இல்லாததால், வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 10:00 மணியுடன் மூடப்பட்டது. வழக்கமாக தினசரி 1,000க்கும் மேற்பட் டோர் வெளிப்புற சிகிச்சைக்கு புதிதாக அட்டை பதிவு செய்வர். ஆனால், கடந்த 2 நாட்களாக 350க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சைக்கு பதிவு செய்தனர். இதனால் வெளிப்புற சிகிச்சை பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.கொல்கட்டா பெண் மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ளதால் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருப்பு முக கவசம் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.ரத்தம் சிந்தி நீதி பெறுவோம் என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி, நேற்று முன்தினம் துவங்கிய ரத்த தானம் நேற்று 2வது நாளாக தொடர்ந்தது.மாலையில் அண்ணா சிலை ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து பேரணி நடந்தது.