| ADDED : ஜூன் 16, 2024 05:50 AM
புதுச்சேரி: பாதாள சாக்கடை ஊழல் குறித்த விவரங்கள் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.புதுச்சேரியில் பொதுப்பணித்துறை சார்பில், புனரமைக்கப்பட்ட பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் தற்போது நடந்து வரும் புனரமைப்புப் பணிகளை கவர்னர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார்.அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமைச் செயலர் சரத் சவுகான், வீட்டு வசதி மற்றும் செய்தித்துறைச் செயலர் கேசவன், கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.கவர்னர் ராதாகிருஷ்ணன், கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடம், பழைய வடி சாலை கட்டட வளாகம், பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்படும் அர்பன் சென்டர், மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி பள்ளி, கலவைக் கல்லுாரி, குமரகுருபள்ளத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு, கருவடிக்குப்பத்தில் உள்ள காமராசர் மணிமண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.கவர்னர் கூறியதாவது:புதுச்சேரியின் பாரம்பரியமும், கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பழைய கட்டடங்களின் பழமை மாறாமல் புதுப்பிக்கின்றன. இரண்டு மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும். கழிவுநீரை வெளியேற்றுவதில் என்னென்ன பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று தெளிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. சூரத்தில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் நிபுணர்களை வரவழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.சில இடங்களில் கழிவுநீர் ஓட்டம் இல்லாத காரணத்தால் தேங்குவதற்கு வாய்ப்புள்ளது என்பதால், அதை உரிந்து எடுப்பதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன. சூரத்தில் கழிவுநீர் வடிகால் அமைப்புகள் உலக பிரசித்தி பெற்றதாக இருக்கின்றன. புதுச்சேரியிலும் அதுபோன்ற தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும் என்பதற்காக நிபுணர்களை வரவழைத்துள்ளோம்.பாதாள சாக்கடை ஊழல்குறித்த விவரங்கள் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கவர்னர் மாளிகை அவசியம் புதுப்பிக்கப்பட வேண்டும். பழைய வடிசாலை கட்டட வளாகத்திற்கு மாற்றி விட்டு கவர்னர் மாளிகை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.