| ADDED : ஜூன் 30, 2024 05:24 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவு அகற்றியதால் பரபரப்பு நிலவியது.சென்னை - திருச்சி ரயில் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இங்கு, நடைமேடை 3, 4க்கு எதிர்புறம் ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டண கழிவறை பராமரிக்கப்படுகிறதுநீரிழிவு நோயாளிகள், முதியோர் தினசரி நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கழிவறை செப்டிக் டேங்கில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமமடைந்து வந்தனர்.அதைத் தொடர்ந்து, கழிவறை ஊழியர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல், வெறும் கைகளால் இரும்பு கம்பியை வைத்துக் கொண்டு, செப்டிக் டேங்கை சுத்தம் செய்தனர். இதனை அவ்வழியே சென்ற ரயில் பயணிகள் பார்த்து முகம் சுழித்தனர். அம்ரித் பாரத் திட்டத்தில், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் 9 கோடி ரூபாயில் நவீனமயமாக்கும் நிலையில், செப்டிக் டேங்கை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.