| ADDED : ஜூன் 11, 2024 05:43 AM
புதுச்சேரி: மேரி கட்டடத்தை புதுச்சேரி நகராட்சியின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இறுதி கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.புதுச்சேரி கடற்கரையில் அமைந்திருந்த மேரி கட்டடம் மிக பழமை வாய்ந்தது. இக்கட்டடம், கடந்த 1870-71ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஆட்சியின்போது, பிரெஞ்சு கட்டடக் கலை நயத்துடன் கட்டப்பட்டது. இந்த பிரமாண்ட கட்டடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டடம் பழுதடைந்தது. கடந்த 2014ம் ஆண்டு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் மேரி கட்டடத்தை மீண்டும் அதே இடத்தில் பழமை மாறாமல் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு, திட்ட அமலாக்க முகமை மூலமாக, ரூ.14.83 கோடி செலவில் கட்டுமான பணிகள் துவங்கியது. 690 சதுர மீட்டர் பிரதான கட்டடம், தரைத்தளம், முதல் தளம், கருத்தரங்கு கூடம், திருமண பதிவு அறைகள் என பாரம்பரிய பழைய கட்ட பாணியில் கட்டி முடிக்கப்பட்டது.மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கட்டப்பட்டதால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, மேரி கட்டடத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், முறைப்படி புதுச்சேரி நகராட்சியிடம் மேரி கட்டடம் ஒப்படைக்கப் படவில்லை.இதேபோல் புதிதாக கட்டியுள்ள கட்டடத்தில் கவர்னர் அலுவலகத்தை இட மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. சில துறைகளின் செயலர்கள் தங்களின் அலுவலகத்தை புதிய கட்டடத்தில் மாற்றி கொள்ள போட்டி போட்டனர். இதனால், மேரி கட்டடம் கட்டி முடித்து 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் பாழாகி வருகிறது.இதற்கிடையில் மேரி கட்டடத்தை புதுச்சேரி நகராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மேரி கட்டடம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஒரு கட்டடத்தை கட்ட தான் பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் புதுச்சேரியில் கட்டி முடித்த கட்டடத்தை கூட பயன்பாட்டிற்குகொண்டு வர மூன்று ஆண்டுகள் பிடித்துள்ளது.
ஆட்சியாளர்கள் - கவர்னர் உரசல்
கடந்த 2021 பிப்ரவரியில் இக்கட்டத்தை திறக்க அப்போதைய காங்., அரசு முடிவு எடுத்தது. ஆனால் அழைப்பிதழில் அப்போதைய கவர்னர் கிரண்பேடி பெயர் இல்லை. இதனால் இவ்விழாவை தள்ளி வைக்க கிரண்பேடி உத்தரவிட்டார். மத்திய அரசால் நிதி தரப்பட்ட திட்டங்கள், பணிகளை திறக்க மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை கவர்னர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டது. இச்சூழலில் எம்.எல்.ஏ.,கள் ஆதரவை திரும்ப பெற்றதால் பெரும்பான்மையின்றி புதுச்சேரியில் காங்., அரசு கவிழ்ந்தது.