| ADDED : மே 05, 2024 03:28 AM
பா.ஜ., வேட்பாளர் தனது வெற்றிக்காக யாகம் நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பா.ஜ., - காங்., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. குறிப்பாக, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்துக்கும், காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் இடையே அனல் பறக்கும் போட்டி நிலவியது.தேர்தல் பிரசாரம் ஓய்ந்து, ஓட்டுப் பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. ஓட்டுப் பதிவு முடிந்தவுடன், மின்னணு ஓட்டுப் பெட்டிகள் ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் 4ம் தேதியன்று ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.இந்நிலையில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், தேர்தல் வெற்றிக்காக யாகம் நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மங்கலத்தில் உள்ள இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கும் மேலாக பூஜைகள் நடந்துள்ளது. இதற்காக வந்தவர்கள் மங்கலத்திலேயே தங்கியிருந்து பூஜையை நடத்தி உள்ளனர்.ஓட்டுப் பதிவு நாளான 19ம் தேதியன்று மாலை 6:00 மணியுடன் பூஜைகள் முடிவடைந்ததாக நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமியை போல, நமச்சிவாயமும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.