புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் 82 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இந்திய ஐ.சி.எம்.ஏ.ஐ., நிறுவனம் சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வை கடந்த டிசம்பர் மாதம் நடத்தியது. இத்தேர்வில், புதுச்சேரி ஆதித்யா கல்லுாரியின் பி.காம்., முதலாம் ஆண்டு மாணவர்கள் 36 பேரும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரும் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் கவிப்பிரியா 400க்கு 332, தர்ஷினி ராஜி 330, ரோஷினி 330 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும், மாணவர்கள் கார்த்திக்ராஜ் 314, விஜய் 312, கோகுல் 310 மற்றும் மாணவி லிங்கேஷ்வரி 310 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும் கல்லுாரி நிறுவனர் ஆனந்தன் கூறியபோது, கடந்த ஆண்டு நடந்த தேர்வில், ஆதித்யா கல்லுாரியின் 19 மாணவர்கள் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நவீன காலத்திற்கு ஏற்ப உயர் கல்வியில் பல மாற்றங்களை கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, செயற்கை நுண்ணறிவு, இயந்திர தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற பாடங்களை தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு இணையாக நடத்தி வருகிறது.இளங்கலை பட்டத்தோடு ஒருங்கிணைந்த சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.சி.ஏ., போன்ற ப்ரொபஷனல் கல்விக்கான பாடங்களையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறது. வணிகவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் சம்மந்தமான சான்றிதழ் பாடப்பிரிவுகளையும் நடத்தி வருகிறது என்றார்.