கல்வியியல் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது:புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி உயர்கல்வி துறையில் கீழ் சேர்க்கப்படும் என முதல்வர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார்.அதன் அடிப்படையில் கடந்த ஆண்டில் சென்டாக் மூலம் விண்ணப்பம் பெற்று நிரப்பப்பட்டது. மருத்துவ கல்லுாரிகளின் கட்டணத்தை ஏற்பதை போன்று அரசே, கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர்களின் கட்டணத்தை ஏற்க வேண்டும்.இல்லையெனில் கட்டண குறைப்பு செய்ய வேண்டும். காரைக்கால் கல்வியியல் கல்லுாரியில் ரூ. 5,100 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு சேர்க்கை அளிக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி அரசின் கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் ரூ.51,000 சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே புதுச்சேரி கல்வியியல் கல்லுாரியிலும் ரூ. 5,100 மட்டும் வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியை புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லுாரியாக பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.