| ADDED : செப் 11, 2026 08:14 PM
புதுச்சேரி: வங்கி ஊழியர்கள் போராட்டத்தால், காசோலை, பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வங்கிகளில் வாரத்தில் 5 நாள் வேலையை உடனடியாக அமல்படுத் வேண்டும். 2024 ஒப்பந்தப்படி மீதமுள்ள சனிக்கிழமைகளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும். போதுமான கிளாரிக்கல் மற்றும் துணை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கிராஜூவிட்டி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். பென்ஷன் புதுபிப்பு, ஒரே மாதிரியான டி.ஏ., ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை வங்கி ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று நடத்தின. புதுச்சேரி யூகோ வங்கி அருகில் வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், போராட்டம் நடந்தது. கன்வீனர் நித்திஷ் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி கூட்டமைப்பு லீனா, ஹரிஹரன், செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், நுாற்றுக்கணக்கான வங்கி ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வரும் 26, 29, 30 தேதிகளில் வங்கி ஊழிர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அக்டோபர் மாதம் 26ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வங்கி சேவை பாதிப்பு:: ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கவில்லை. இதனால், காலையில் வங்கிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். காசோலை, பண பரிவர்த்தனைகளும் பாதித்தன.