| ADDED : ஆக 25, 2026 05:11 PM
புதுச்சேரி, ஆக. 26– புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு முழுமையான ஏமாற்றம் தரக்கூடியது என காங்., வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில தலைவர் வைத்திலிங்கம் அளித்த பேட்டி: பா.ஜ., என்.ஆர்.காங்., அரசு நம்பிக்கையை இழக்கும் அளவிலான மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. 5 ஆண்டுகள் கடந்தது, 2வது முறையும் அரசு வந்திருக்கிறது. ஆனால், எந்தவித மாற்றமும் இல்லை. மக்களுக்கு முழுமையான ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட் ஆகும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு எந்த அறிவிப்பு இல்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் 2 கொண்டு வரப்படும் என கூறினர். அது பற்றிய தகவலும் இல்லை. ரூ. 1000 கோடிக்கு சாலை வசதிகள் மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இப்போது, ரூ. 430 கோடியாக சுருங்கி உள்ளது. மீதமுள்ள ரூ. 500 கோடிக்கு என்ன திட்டம். மேம்பாலம் திட்டத்திற்கு அடிக்கல் நடந்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த பணிகளும் துவங்கப்படவில்லை. சட்டசபை வருது , வருதுன்னு சொல்லிட்டு, அவர் இப்ப வீட்டிற்கு போயிட்டார். அதுபோல ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் என்.ஆர்.காங்., அரசு என சொல்லாதீங்க. பா.ஜ., நமச்சிவாயம் அரசு என சொல்ல வேண்டும். சட்டசபையில் கவர்னர் உரையாற்றியது அனைத்தும் பா.ஜ., அறிக்கைதான். நமச்சிவாயம் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கிறது. அந்தந்த நேரத்தில் கணக்கு தீர்க்கணும்னு சொன்னாரு. ஆனால், நமச்சிவாயம் தான் அவரை நல்லா கணக்கு தீர்த்து இருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்., அரசு நடக்குதுனு சொல்ல மாட்டோம். பா.ஜ., அரசு தான் நடக்குதுனு சொல்லுவோம். நமச்சிவாயத்தின் செயல்பாடுதான் சொல்லுவோம் என்றார்.