| ADDED : ஜன 05, 2024 06:39 AM
புதுச்சேரி : அரசு மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கவர்னர், முதல்வருக்கு சங்கத்தின் தலைவர் பாலா அனுப்பியுள்ள மனு;புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தேசிய மருத்துவ கவுன்சில் கல்லுாரியை ஆய்வு செய்ய உள்ளது.இந்த ஆய்வுக்கு முன், 84 பதவிக்கான பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரிர்களை நியமிக்க வேண்டும்.இதற்கான பதவிகளை உருவாக்கி சுகாதார துறை, நிதித் துறையிடமிருந்து உரிய அனுமதியை பெற வேண்டும்.கடந்த 2019ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான 150 இடங்களை 180 இடங்களாக உயர்த்தி தேசிய கவுன்சில் அறிவித்தது.ஆனால் இன்றுவரை 150 மருத்துவ மாணவர்கள் பயிலுவதற்கான பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பேராசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதன் பிறகு பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப இயலாமல், அரசு மருத்துவ கல்லுாரி சேர்க்கைக்கும் சிக்கல் ஏற்படும்.எனவே உடனடியாக தகுதி அடிப்படையில் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.