| ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 6 பேரிடம் 1.61 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி உழவர்கரையை சேர்ந்தவர் சுதாகர். பிரபல நிறுவனத்தில் இருந்து ஆடைகள் வாங்குவதற்கு இணையதளம் மூலம் ஆர்டர் செய்தார். அதற்கான முன்பணம் 80 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். அதன் பின் அந்த இணையதளம் போலியானது என தெரியவந்தது.அதே போல, ஜிப்மர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிரண், என்பவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, தொலை தொடர்பு அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர், தங்கள் மீது துன்புறுத்தல் வழக்கு போடப்பட்டுள்ளதால், ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை தடை செய்துள்ளோம் என தெரிவித்தார். தடையை நீக்க அபராதம் கட்ட வேண்டும் கூறினார்.அதை நம்பி சாய் கிரண் தனது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். மேலும், செட்டிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அருண்மொழி, இவரது மொபைலில் தொடர் கொண்டு மர்ம நபர் குறைந்த வட்டிக்கு லோன் தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர், 19 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். பின்னர் அந்த நபரியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. முத்தியால்பேட்டையை சேர்ந்த மணிமேகலை, 3 ஆயிரத்து 500, காரைக்காலை சேர்ந்த ஸ்ரீமதி, 5 ஆயிரம், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுகன்யா 3 ஆயிரத்து 500 ரூபாய் என பல்வேறு வகையில் ஆன்லைன் மூலம் மர்ம நபர்களுக்கு பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளர். இது குறித்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.