உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிற்சாலை குறைகளை கேட்டறிய ஆலோசனை மன்றம்: முதல்வர் தலைமையில் உதயமானது

தொழிற்சாலை குறைகளை கேட்டறிய ஆலோசனை மன்றம்: முதல்வர் தலைமையில் உதயமானது

புதுச்சேரி: தொழிற்சாலைகளின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முதல்வர் தலைமையில், புதிதாக ஆலோசனை மன்றம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 9240 குறு,சிறு தொழிற்சாலைகள், 191 நடுத்தர தொழிற்சாலைகளும், 77 பெரிய தொழிற்சாலைகள் என மொத்தம் 9,508 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 3050 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன. மாநில பொருளாதாரத்தில் உயிர்நாடியாக இருக்கும் தொழிற்சாலைகள், லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து உள்ளன. ஆனால், அத்தகைய தொழிற்சாலைகளின் குறைகளை ஆளும் அரசுகள் உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்வதில்லை என பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.மனுக்களுடன் செல்லும்போது மனம் இறங்கும் அரசுகள் அதன் பிறகு தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை மறந்துபோய் விடுகின்றன. இது மாநில வேலைவாய்ப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.இது போன்ற சூழ்நிலையில், புதிய மாற்றமாக புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதிதாக ஆலோசனை மன்றம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பில், தொழில் துறை அமைச்சர் துணை சேர்மனாகவும், தலைமை செயலர், அனைத்து துறை செயலர்கள், முன்னோடி வங்கி, இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் என 16 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை மன்றத்தின் உறுப்பினர் செயலராக இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த ஆலோசனை மன்றம் புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி, வணிகம், முதலீடு என அனைத்திற்கு பக்கபலமாக இருந்து அரசிற்கு வழிகாட்டும். புதிய தொழிற்சாலைகள் உடனடியாக துவங்க சிறப்பு சலுகை தரப்படுகின்றது. தொழில் துவங்கிய பிறகு மூன்றாண்டுக்குள் அனுமதி பெற்றால் போதுமானது. ஆனால், மாநிலத்தில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு ஏதும் இல்லை. இது தொழில் துறையினர் மத்தியில் பெரும் மனக்குறையாகவே இருந்து வருகின்றது.மாநிலத்தில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகள், ஜி.எஸ்.டி., மின்வரி, தொழில்வரி என முறையாக கட்டுகின்றன. அப்படி முறையாக செயல்படும் தொழிற்சாலைகள் சிறிது விரிவாக்கம் செய்து கொள்ளுகிறோம் என்று அரசினை அணுகும்போது அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி கிடைப்பதில்லை. லொட்டு லொசுக்குகென ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு அரசு துறைகள் அங்கும் இங்கும் அலைகழிக்கின்றன.இதேபோன்று தற்போதுள்ள கிலோவாட் மின்தேவையை அதிகரிக்க விண்ணப்பித்தாலும் அவ்வளவு சுலபத்தில் அனுமதி கிடைப்பதில்லை. அனைத்து துறைகளுக்கும் கோப்புகளுடன் அலைந்தால் தான் அனுமதி கிடைக்கின்றது.ஈஸி ஆப் டூயிங் பிசினஸ் என்னும் திட்டத்தின் மாநில அளவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் இன்னும் எளிதாக்கப்படவில்லை. எனவே இப்பிரச்னைகளை முதல்வர் தலைமையிலான ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு மாநிலத்தில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகள் கொண்டு சென்று தீர்வினை காண முடிவு செய்துள்ளன.

கேரளா தான் முன்னோடி

புதுச்சேரியின் தலைமை செயலராக இருந்த பத்மநாபன் தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை தீர்க்க ஆர்வமாக இருந்தார். மாதந்தோறும் தொழில் நிர்வாகிகளை கேட்டு பிரச்னைகளை தீர்வு காண முயன்றார்.அதன் பிறகு வந்த தலைமை செயலர்கள் தொழில் வளர்ச்சி பக்கம் எட்டிக்கூட பார்க்க வில்லை. அவர்களின் குறைகளை கேட்டுநிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை. மனுக்கள் பெற்றதோடு சரி. இப்போதுள்ள ஆலோசனை மன்றம் சட்ட பூர்வமான அமைப்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது அவ்வப்போது கூடி தொழில் வளர்ச்சியை விவாதிக்கும். கேரளாவை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்தில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ