| ADDED : ஜன 25, 2024 06:32 AM
புதுச்சேரி : சிறுமியை கடத்தி சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த லோடுமேனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.புதுச்சேரியை சேர்ந்த 9ம் வகுப்பு படித்த 14 வயது சிறுமி, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கடைக்கு சென்றபோது மாயமானார். அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சிறுமியை அரியாங்குப்பத்தை சேர்ந்த லோடுமேன் நாகராஜன் மகன் பிரபு (எ) பிரபாகரன்,27; காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று அரியாங்குப்பம் மாந்தோப்பு கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.பிரபாகரனை கைது செய்த போலீசார், அவர் மீது புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி சோபனாதேவி, பிரபாகரனுக்கு, போக்சோ குற்றத்திற்கு 10 ஆண்டு, கடத்தல் குற்றத்திற்கு மூன்றாண்டு, அடைத்து வைத்த குற்றத்திற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அரசு வழங்க உத்தரவிட்டார்.