| ADDED : டிச 29, 2025 05:48 AM
புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை மற்றும் லேசர் ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். 2026 புத்தாண்டு பிறக்க 2 நாட்களே உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி வர துவங்கியுள்ளனர். இப்போதே ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனிடையே புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: ஆசியாவிலேயே சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி, உருவெடுத்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரை 19 லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். புதுச்சேரிக்கு, புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என, சுற்றுலாத் துறை எதிர்பார்க்கிறது. அவர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட சுற்றுலாத்துறை சார்பில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. போலீஸ், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, நகராட்சி இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் நெரிசலில் சிக்கக்கூடாது என்பதற்காக ஒயிட்டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்த உப்பளம் மைதானம், பாரதிதாசன் கல்லுாரி உட்பட பல இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் இடத்திலிருந்து கடற்கரை வந்து செல்ல மின்சார பஸ் சேவையும் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் நாளை மறுநாள் (31ம் தேதி) இரவு 7:00 மணி முதல் இன்னிசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சியோடு, வாணவேடிக்கை, லேசர் ஷோவும் நடத்தப்பட உள்ளது. ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்க்க, 2 இடங்களில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படும்' என்றார்.