| ADDED : பிப் 16, 2024 06:59 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் மாயமான குழந்தையை காரைக்காலில் போலீசார் அதிரடியாக மீட்டனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு, பொம்மை விற்று கொண்டிருந்தனர். அப்போது, இவர்களது, மூன்றரை வயது மகள் சனல்யா மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்து, இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், மாயமான குழந்தை காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது நேற்று மாலை தெரிய வந்ததது. அதன்பேரில் தனிப்படை போலீசார் காரைக்கால் விரைந்து சென்று உறவினர்கள் வீட்டில் இருந்த குழந்தையை போலீசார் மீட்டனர். குழந்தை எப்படி காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றது, குழந்தையை வேறு காரணத்திற்காக கடத்தி சென்றனரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.