புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஜோஸா சுய நிதி இடங்களில் ஏற்படும் காலியிடங்கள், சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில், சென்டாக் மூலம் விண்ணப்பித்திருந்தால் மட்டுமே சேர முடியும்.இந்திய அளவில் சிறந்த இன்ஜினியரிங் கல்லுாரியாக உள்ள புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி, அண்மையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்ந்துள்ளது. இங்குள்ள பி.டெக்., படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. சிறிய தசம மதிப்பெண் வித்தியாசத்தில் கூட இங்கு படிக்கும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். இப்படி இடம் கிடைக்காத மாணவர்களும் இங்கு படிக்க மற்றொரு வழி உள்ளது.அதற்கு ஜே.இ.இ., தேர்வு எழுதி இருக்க வேண்டும். சென்டாக் மூலம் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஜே.இ.இ., தேர்வு எழுதிய மாணவர்கள், அதற்கான மதிப்பெண்ணுடன் முதலில் ஜோஸா இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் ஜே.இ.இ., மதிப்பெண்களை கணக்கிட்டு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பி.டெக்., இடங்களை நிரப்பப்படும்.நிரம்பாத பி.டெக்., காலியிடங்கள் சென்டாக்கிடம் ஒப்படைப்படும். இந்த காலியிடங்களை சென்டாக் தான் கவுன்சிலிங் நடத்தி நிரப்பும். எனவே, சென்டாக் மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே இந்த சுய நிதி இடங்களில் சேர முடியும். கடந்தாண்டு கூட 112 சீட்டுகள் சென்டாக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இதிலும் மாணவர்கள் ஆர்வமாக சேர்ந்தனர்.இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறுகையில், 'ஜோசா மூலம் நிரம்பாத இடங்கள், சென்டாக் மூலம் தான் நிரப்பப்படுகிறது. எனவே, தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசு ஒதுக்கீட்டிற்கு மட்டுமின்றி ஜோஸா காலியிடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.இப்படி ஏற்படும் காலியிடங்கள் முதலில் ஜே.இ.இ., மதிப்பெண் அடிப்படையிலும், அதன் பிறகு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடக்கும். பிற மாநில மாணவர்கள், அகில இந்திய ஓ.சி.ஐ., வளைகுடா, பாரின் நேஷனல் பிரிவு மாணவர்களும் சுய நிதி இடங்களுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் பல மாணவர்களுக்கு இந்த வழிமுறை தெரியாமல் உள்ளது. ஜோஸா காலியிடங்களுக்கு ஆரம்பத்தில் விண்ணப்பிக்காமல் கடைசி நேரத்தில் சீட்டிற்காக வந்து அலைமோதுகின்றனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.தொழில்நுட்ப பல்கலைக்கழக சுய நிதி காலியிடங்களில் சேர ஜே.இ.இ., தேர்வு எழுதியவர்கள் இப்போதே அரசு ஒதுக்கீட்டுடன் சேர்த்து விண்ணப்பிப்பது நல்லது' என்றனர்.
எவ்வளவு சீட்டுகள்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மொத்தம் 9 பி.டெக். படிப்புகள் உள்ளன. இதில் சுய நிதி இடங்களாக பிற மாநில மாணவர்களுக்கு 48 சீட்டுகள் உள்ளன. புதுச்சேரி மாணவர்களுக்கு சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., மெக்கானிக் படிப்பில் தலா 15 சீட்டுகள் என, 60 இடங்களும், மெக்கட்ரானிஸ் படிப்பில் 7 சீட்டுகளும் உள்ளன.தவிர அகில இந்திய அல்லது ஓ.சி.ஐ., பிரிவினருக்கு சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., மெக்கானிக் படிப்பில் தலா 45 சீட்டுகள் வீதம் 180 சீட்டுகளும், மெக்கட்ரானிஸ் படிப்பில் 22 சீட்டுகளும் உள்ளன. மேலும் வளைகுடா பிரிவில் 25 சீட்டுகளும், பாரின் நேஷனல் பிரிவினருக்கு 51 சீட்டுகளும் உள்ளன.