உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது

மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது

புதுச்சேரி: கருவடிக்குப்பம் பூங்காவில் யாசகர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த எலட்ரீஷியன், சலுான் கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, கருவடிக்குப்பம், ஜிஞ்சர் ஓட்டல் எதிரே உள்ள சிங்கம் பார்க்கில், கடந்த 31ம் தேதி காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட நபர், பெரிய முதலியார்சாவடியைச் சேர்ந்த மோகன், 42; என்பதும், திருமணம் செய்து கொள்ளாத மோகன், யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. கொலை வழக்கு தொடர்பான சாமிப்பிள்ளைத்தோட்டம், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த எலட்ரீஷியன் சுனில்குமார்,22; முத்தியால்பேட்டை, சோலை நகர் சலுான் கடை ஊழியர் தமிழரசன், 29; ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 28ம் தேதி சிங்கம் பார்க்கில் மோகன் தங்கியிருந்தபோது, அங்கு வந்த சுனில்குமாரிடம் உணவு கேட்டுள்ளார். இதையடுத்து, சுனில்குமார் தனது வீட்டிற்கு சென்று பிரியாணி, தனது பழைய உடைகளை கொண்டு வந்து மோகனுக்கு கொடுத்துள்ளார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அன்று பைக்கில் இருவரும் திருபுவனைக்கு சென்று மது அருத்தி உள்ளனர். அப்போது, சுனில்குமாரின் மொபைல் போன் மாயமானது. தன்னுடைய மொபைல் போனை மோகன் தான் திருடியதாக நினைத்து சுனில்குமார் தகராறு செய்தார். பின், இருவரும் பைக்கில் புதுச்சேரிக்கு திரும்பியபோது, வழியில் பைக் பெட்ரோல் இன்றி நின்றதால், மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, சுனில்குமார் தனது நண்பர் தமிழரசனுடன் மோகனை தேடி வந்த நிலையில், கடந்த 30ம் தேதி சிங்கம் பார்க்கில் இருந்த மோகனை இருவரும் பிடித்து, ஆரோவில் அழைத்து சென்று மொபைல் போனை திரும்ப தரும்படி கேட்டு அடித்துள்ளனர். பின், அங்கிருந்து மீண்டும் சிங்கம் பார்க்கிற்கு அழைத்து வந்த இருவரும் அங்கேயும் மோகனை அடித்து மொபைலை கேட்டுள்ளனர். அதற்கு, மோகன் தன்னிடம் மொபைல்போன் ஏதுவும் இல்லை என கூறியதால், கோபமடைந்த சுனில்குமார் அங்கிருந்த பாறை கல்லை மோகன் தலையில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சுனில்குமார் மற்றும் தமிழரசன் ஆகியோரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மொபைல் போன் மாயமானது தொடர்பாக, தன்னுடன் நட்பாக பழகியவரையே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை