உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுல்தான்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சுல்தான்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

வில்லியனுார்: சுல்தான்பேட்டை மெயின் ரோட்டில் இரண்டு புறமும் சாலையோர கடைகள் அதிகரித்து, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.புதுச்சேரி - விழுப்புரம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இதனால், வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலையில் ஆரம்பித்து, இந்திரா சதுக்கம் வரை சாலையை அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.சுல்தான்பேட்டை பகுதியில் சென்டர் மீடியன் பணிகள் முடிந்துள்ள நிலையில், இங்கு சாலையின் இருபுறமும் தற்காலிக சாலையோர கடைகள் பெருகி வருகின்றன. மேலும், கடைகளுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர்.இதன் காரணமாக, சுல்தான்பேட்டையில் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது.குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளி மற்றும் கல்லுாரி பஸ்களும், பயணியர் பஸ்களும் செல்கின்றன. அதுபோன்ற நேரங்களில் நீண்ட துாரம் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.இதனால், கார் உள்ளிட்ட இலகு ரக வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது தொடர் கதையாக உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், சுல்தான்பேட்டை பகுதியில் விடுபட்டுள்ள சாலை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். மேலும், சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்க முடியாத வகையிலும், சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்கும் வகையிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.வில்லியனுார் போக்குவரத்து போலீசாரும் பாரபட்சம் பார்க்காமல் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். சுல்தான்பேட்டை பகுதி யில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை