| ADDED : ஜூலை 09, 2024 10:58 PM
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டார். 'டி-20' உலக கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியில், இந்திய அணி சாம்பியன் ஆனது. இத்தொடருடன் இவரது பதவிக்காலம் முடிந்தது. புதிய பயிற்சியாளருக்காக முன்னாள் வீரர்கள் கவுதம் காம்பிர், டபிள்யு.வி.ராமனிடம் நேர்காணல் நடந்தது. நேற்று புதிய பயிற்சியாளராக காம்பிர் 42, நியமிக்கப்பட்டார். இம்மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று 'டி-20' தொடரில் பங்கேற்கும். இத்தொடரில் இருந்து காம்பிர் பயிற்சி துவங்கும். இவர் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை நீடிப்பார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு செயலர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில்,'புதிய பயிற்சியாளராக காம்பிரை வரவேற்பதில் மகிழ்ச்சி. பேட்டர், பயிற்சியாளர், ஆலோசகர் என தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல பிரிவுகளில் சிறந்து விளங்கிய காம்பிர், இந்திய கிரிக்கெட்டை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வார். இவரது அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். பி.சி.சி.ஐ., முழு ஆதரவு தரும்,'என தெரிவித்துள்ளார்.'உலக' அனுபவம் எப்படிகாம்பிர், கடந்த 2007 'டி-20', 2011 ஒருநாள் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் துவக்க வீரராக இருந்தார். ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா அணிக்கு கேப்டனாக இருந்து 2012, 2014ல் கோப்பை வென்று தந்தார். 2024ல் ஆலோசகராக செயல்பட்டு, கோல்கட்டா கோப்பை வெல்ல உதவினார்.கனவு நனவாக...காம்பிர் கூறுகையில்,'' இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்வேன். 140 கோடி மக்களின் கனவுகளை தோளில் சுமந்துள்ளனர் இந்திய அணியினர். இவர்களது கனவு நனவாக, என்னால் முடிந்ததை செய்வேன்,''என்றார்