| ADDED : ஆக 07, 2024 11:42 PM
கொழும்பு: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 110 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.இலங்கை சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி 'டை' ஆனது. இரண்டாவது போட்டியில் இலங்கை வென்றது. கொழும்புவில் மூன்றாவது, கடைசி போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு ரியான் பராக் அறிமுகமானார். லோகேஷ் ராகுலுக்கு பதிலாக ரிஷாப் பன்ட் தேர்வானார். 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.'டாப்-ஆர்டர்' அபாரம்: இலங்கை அணிக்கு பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்ணான்டோ ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது அக்சர் படேல் 'சுழலில்' நிசங்கா (45) சிக்கினார். அக்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அவிஷ்கா, 65 பந்தில் அரைசதம் கடந்தார். முகமது சிராஜ் வீசிய 29வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்ட அவிஷ்கா (96), ரியான் பராக் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ரியான் பராக் பந்தில் கேப்டன் சரித் அசலங்கா (10) ஆட்டமிழந்தார்.முகமது சிராஜ் 'வேகத்தில்' சதீரா சமரவிக்ரமா 'டக்-அவுட்' ஆனார். வாஷிங்டன் சுந்தர் 'சுழலில்' ஜனித் லியானகே (8) சரணடைந்தார். ரியான் பராக் பந்தில் துனித் வெல்லாலகே (2) போல்டானார். ரியான் பராக் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய குசால் மெண்டிஸ், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். இவர், 59 ரன்னில் அவுட்டானார்.இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 248 ரன் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் (23), தீக் ஷனா (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரியான் பராக் 3 விக்கெட் வீழ்த்தினார்.ரோகித் ஆறுதல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (6) ஏமாற்றினார். தீக் ஷனா வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா (35) நம்பிக்கை தந்தார். ரிஷாப் பன்ட் (6) சோபிக்கவில்லை. விராத் கோலி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் (2), ஸ்ரேயாஸ் ஐயர் (8), ரியான் பராக் (15), ஷிவம் துபே (9) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் (30) ஆறுதல் தந்தார். குல்தீப் யாதவ் (6) நிலைக்கவில்லை.இந்திய அணி 26.1 ஓவரில் 138 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட் சாய்த்தார். 27 ஆண்டுகளுக்கு பின்...ஒருநாள் போட்டி அரங்கில் 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி, இரு அணிகள் பங்கேற்கும் தொடரில் ('பைலேட்ரல் சீரிஸ்') இலங்கையிடம் தொடரை பறிகொடுத்தது. கடைசியாக 1997ல் கொழும்புவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 0-3 என இலங்கையிடம் இழந்தது. அதன்பின் இவ்விரு அணிகள் மோதிய 13 தொடரில், இந்தியா 11ல் கோப்பை வென்றது. இரண்டு தொடர் சமன் ஆகின.331 சிக்சர்ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்லுடன் பகிர்ந்து கொண்டார் இந்தியாவின் ரோகித். இருவரும் தலா 331 சிக்சர் அடித்தனர். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர்) உள்ளார்.