உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சென்னையிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்: சிமர்ஜீத் சிங் அசத்தல்

சென்னையிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்: சிமர்ஜீத் சிங் அசத்தல்

சென்னை: சிமர்ஜீத் சிங் (3 விக்.,) கைகொடுக்க, சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 'பேட்டிங்' தேர்வு செய்தார். ஆடுகளம் மந்தமாக இருந்ததால், ராஜஸ்தான் அணி ரன் சேர்க்க தடுமாறியது. சென்னை தரப்பில் சிமர்ஜீத் சிங் மிரட்டினார். இவரது 'வேகத்தில்' ஜெய்ஸ்வால் (24), ஜோஸ் பட்லர் (21), சஞ்சு சாம்சன் (15) அவுட்டாகினர். தனிநபராக போராடிய ரியான் பராக் அவ்வப்போது பவுண்டரி அடித்தார். தேஷ்பாண்டே ஓவரில் துருவ் ஜுரல் (28), சுபம் துபே (0) வெளியேறினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன் மட்டும் எடுத்தது. பராக் (47) அவுட்டாகாமல் இருந்தார்.

ருதுராஜ் அபாரம்

சுலப இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா அதிரடி துவக்கம் தந்தார். பவுல்ட் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். அஷ்வின் வலையில் ரச்சின் (27) சிக்கினார். சகால் பந்தில் மிட்சல் (22) வீழ்ந்தார். மொயீன் அலி (10) நிலைக்கவில்லை. அஷ்வின் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த ஷிவம் துபே, 18 ரன் எடுத்தார். ஜடேஜா (5) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக, 16 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்து தவித்தது.பொறுப்பாக ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அணியை கரை சேர்த்தார். பவுல்ட் ஓவரில் சமீர் ரிஸ்வி வரிசையாக இரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி 18.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. 'பிளே-ஆப்' வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது. ருதுராஜ் (42), ரிஸ்வி (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜடேஜா 'அவுட்' சர்ச்சை

அவேஷ் கான் பந்தை (15.5 ஓவர்) 'தேர்ட்மேன்' திசையில் அடித்த ஜடேஜா முதல் ரன் எடுத்தார். பின் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு பாதி துாரம் ஓடி வந்தார். மறுமுனையில் ருதுராஜ் மறுக்க, மீண்டும் 'கிரீசிற்கு' திரும்ப முற்பட்டார். அப்போது கீப்பர் சாம்சன் பந்தை 'த்ரோ' செய்தார். ஜடேஜாவின் முதுகு பகுதியில் பந்துபட, ரன் அவுட் செய்ய முடியவில்லை. இதையடுத்து பீல்டிங்கிற்கு இடையூறு செய்த விதிப்படி சாம்சன் 'அப்பீல்' செய்தார். மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. 'ரீப்ளே'வில் பந்து வருவதை கணித்த ஜடேஜா, 'ஸ்டம்ப்சை' மறைக்கும் வகையில் திசையை மாற்றி ஓடியது தெரிய வர, 'அவுட்' கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜடேஜா, களத்தில் இருந்த அம்பயர்களிடம் விவாதித்துவிட்டு, விரக்தியுடன் வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ