உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காஞ்சிபுரம், செங்கையில் கட்டுமான பணி முடங்கும்...அபாயம்

காஞ்சிபுரம், செங்கையில் கட்டுமான பணி முடங்கும்...அபாயம்

* காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கல் அரவை ஆலைகளில் இருந்து வினியோகிக்கப்படும் 'எம் - சாண்ட்', ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலையை, 30 சதவீதம் வரை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர். இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கட்டுமானப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், பினாயூர் உள்ளிட்ட இடங்களில் 50 கல் குவாரிகள் செயல்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட இடங்களில், கிரஷர் எனும் கல் அரவை ஆலைகள் இயங்குகின்றன.ஆற்று மணல் கிடைக்காததால், கிரஷர்களில் அரைக்கப்படும் எம் - சாண்ட் மண்ணிற்கு கிராக்கி அதிகமாக உள்ளது.இந்நிலையில், எம் - சாண்ட், ஜல்லிக்கற்கள் விலையை, குவாரி உரிமையாளர்கள் திடீரென தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.அதாவது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் எம் - சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையை 30 சதவீதம் வரை தற்போது உயர்த்தியிருப்பது, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம் - சாண்ட் மணல், இப்போது 4,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.பூச்சு வேலைக்கு பயன்படும் 'பி - சாண்ட்' 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த விலை, கட்டுமானப் பணியிடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் துாரத்திற்கு ஏற்ப மேலும் கூடுதலாகி உள்ளது.அதேபோல், கருங்கல் ஜல்லி ஒரு யூனிட் 3,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 3,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30 சதவீதம் வரை கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் நடக்கும் கட்டுமான தேவையை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளும், கிரஷர்களும் பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன.இந்நிலையில் இந்த திடீர் விலை உயர்வு, கட்டுமானத் திட்ட மதிப்பில் கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துவதாக, வீடு கட்டுவோர் தெரிவிக்கின்றனர்.அதாவது, சிறிய அளவிலான வீடு கட்டுவோருக்கு மொத்த செலவினத்தில், 30,000 முதல், 50,000 ரூபாய் வரை கூடுதலாக செலவாவதால், வீடு கட்டுவோர் புலம்புகின்றனர்.இதுகுறித்து, எம் - சாண்ட் விற்பனை செய்வோர் கூறியதாவது:எம் - சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை உயர்வு, தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. கிரஷர்களில் இருந்து கட்டுமான இடங்களுக்கான இடைவெளியை கணக்கிட்டு, இந்த விலை உயர்வு சற்று மாறுபடும்.அதாவது, லாரி வாடகை காரணமாகவே விலை நிர்ணயம் செய்வதில் மாறுபாடு இருக்குமே தவிர, பெரிய அளவில் விலை மாற்றமில்லை. நீண்ட நாட்களாக விலை நிர்ணயத்தில் பெரிய மாற்றமில்லாமல் இருந்தது. இப்போதுதான் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.கட்டுமானப் பணிக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள, 'எம் - சாண்ட்' விலையை, குவாரி உரிமையாளர்கள் அடாவடியாக உயர்த்தி உள்ளதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கட்டுமானப் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு வீடுகள் கட்டுமானம்

சுணக்கம் நிலவுவதால் பீதிகுவாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் வாயிலாக, எம் - -சாண்ட், ஜல்லிக்கற்களை வாங்கி, தனியார் வீடு கட்டுகின்றனர். அவர்களுக்கு சிரமம் இருந்தாலும், கடன் வாங்கியாவது கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர்.அதுவே, உதவுவோர் என அழைக்கப்படும் ஒப்பந்ததாரர்களின் வாயிலாக அரசு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கூடுதல் சுமையாகி உள்ளது. இதனால், அரசு சார்பில் வீடு கட்டும் பணிகள் முடங்கும் நிலை உள்ளதால், அவர்கள் பீதியில் உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் 584 வீடுகள்; மாநில அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2,855 வீடுகள்; பழங்குடியினருக்கு 368 வீடுகள் என, மொத்தம் 3,807 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இவற்றில் மத்திய அரசின் வீடுகளுக்கு 104 சிமென்ட் மூட்டைகள், 320 கிலோ இரும்புக் கம்பிகள்; மாநில அரசின் திட்டத்திற்கு 140 மூட்டை சிமென்ட், 320 கிலோ இரும்புக் கம்பிகள் என அந்தந்த அரசே தருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ