பொன்னேரி,:அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவம் படிப்பதற்கான, 'நீட்' தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, கடந்த மாதம் 5ம் தேதி, நாடு முழுதும்நடந்தது.நீட் தேர்வு முடிவுகள் நேற்று, தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியானது. இதில், பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியிலுள்ள வேலம்மாள் போதிகேம்பஸ் பள்ளி மாணவர் பி.ஸ்ரீராம், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தந்தை பக்கிரிசாமி, சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் சண்முகவள்ளி, குடும்ப தலைவியாக இருக்கிறார்.பத்தாம் வகுப்பு வரை, ராமநாதபுரம் தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீராம், மேல்நிலைப் பள்ளியை பொன்னேரி வேலம்மாள் பள்ளியில் தொடர்ந்தார்.கடந்த இரண்டு கல்வி யாண்டுகளாக பள்ளிபடிப்புடன், நீட் தேர்வுக்கான பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டார். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்றார்.கடின முயற்சியால் தற்போது நீட் தேர்விலும், தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.சாதனை படைத்த மாணவர் பி.ஸ்ரீராமை, வேலம்மாள் கல்விக் குழுமங்களின் நிறுவன தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம்.சிவக்குமார், கல்வியியல் இயக்குனர் கீதாஞ்சலி சசிக்குமார், பள்ளி முதன்மை முதல்வர்மாதவகிருஷ்ணா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.இதுகுறித்து மாணவர் ஸ்ரீராம் கூறியதாவது:10ம் வகுப்பு படிக்கும்போது தான், மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.பெற்றோர் மற்றும் ஆசிரியர் அளித்த ஊக்கத்தால், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படித்துவந்தேன்.நீட் குறித்து மாணவர்களிடம் அதிக அளவில் பயம் இருக்கிறது. அந்த பயத்தை நீக்கிவிட்டால், எளிதாக வெற்றி பெற முடியும். நம்பிக்கையான வார்த்தைகளை கொடுத்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.நம்பிக்கையை கொடுப்பதற்கு ஆள் வேண்டும். எனக்கு, என் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்உறுதுணையாக இருந்தனர்.தமிழக சுகாதாரத் துறை செயலராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தான், எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரை போல்மருத்துவம் முடித்து, ஐ.ஏ.எஸ்., படிக்கவேண்டும் என விருப்பம்.இவ்வாறு அவர்கூறினார்.