பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்தில், கடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் 10, அ.தி.மு.க., சார்பில் 5 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.அதன்பின், தி.மு.க.,வைச் சேர்ந்த சுபலட்சுமி ஒன்றிய குழுத் தலைவராகவும், கிருஷ்ணவேணி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய செயலர்களுக்கு இடையேயான உட்கட்சிப்பூசலில், கடந்த அக்.,13ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.பின், லத்துார் ஒன்றியக் குழு தலைவர் மற்றும் ஒன்றியக் குழு துணைத்தலைவர் பதவி காலியாக உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது.காலியான பதவிகளுக்கான தேர்தல், கடந்த மார்ச் 6ம் தேதி நடந்தது. இதையடுத்து, தேர்தல் நடந்து இரு மாதங்களாகியும் முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை, நேற்று நடக்க உள்ளதாக, அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி குமார் கடிதம் அனுப்பினார்.ஆனால், முன்னாள் நிர்வாகிகள் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வழக்கு முடியும் வரை, தற்போது உள்ள நிலையே தொடரும் என, தெரிவித்திருந்தார்.வழக்கின் மறு விசாரணை ஜூலை 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்கும் விதமாக, ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் இரவு அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.ஜூலை 1ம் தேதி வழக்கின் மறு விசாரணை முடிந்த பின், ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் தேதி அறிவிக்கப்படும்.