மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மதுராந்தகம் நகர் பகுதிக்கு செல்லும் புறவழிச் சாலை ஓரம், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள், இறைச்சி, மருத்துவ கழிவுகள், காய்கறி கழிவுகள் மற்றும் உணவகங்களின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.வளர்ப்பு பன்றிகள், தெரு நாய்கள் மற்றும் கால்நடைகள் அவற்றை உண்பதற்காக அப்பகுதியில் உலா வருகின்றன.மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, புறவழிச் சாலை வழியாக திண்டிவனம் மார்க்கமாகவும், செங்கல்பட்டு மார்க்கத்திலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பேருந்தில் பயணம் செய்யும் பயணியர், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், மிகுந்த அவதியடைகின்றனர்.இதனால், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இதனால், பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர், சொந்த வாகனங்களில் செல்வோர் என, பல தரப்பட்டோரும் பாதிப்படைகின்றனர்.மழை நீரில் தேங்கி உள்ள கழிவுகளால், துர்நாற்றம் மற்றும் கொசுக்கள் உற்பத்தி ஆகிய, சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள 10 டன் அளவுக்கும் அதிகமான குப்பை கழிவுகளை முறையாக அகற்றி, பிளீச்சிங் பவுடர் போடவும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் வேண்டும்.இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குப்பை எடுத்து வந்து கொட்டுவோரை கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.