திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.10 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் 20 அடி ஆழம் மண் எடுத்ததால் விவசாயம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளுக்காக மண் எடுக்கவும், ஏரியை ஆழப்படுத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதற்காக, கடந்த 31ம் தேதி இந்த ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்ல லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் வந்தன. இதையறிந்து வந்த ஆலத்தூர் மற்றும் சிறுதாவூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மண் அள்ளாமல் லாரிகள் திரும்பிச் சென்றன. நேற்று மீண்டும் மண் அள்ள வாகனங்களும், பொக்லைன் இயந்திரங்களும் வந்தன. இதையறிந்த ஆலத்தூர் மற்றும் சிறுதாவூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து ஆலத்தூர் மக்கள் கூறியதாவது:ஏரியில் மண் அள்ளிச் சென்றால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும். மேலும், ஏரி அருகே குடிநீர் கிணறு உள்ளது. மண் எடுத்துச் சென்றால், கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும், விவசாய பணி முடங்கி, 1,000 விவசாயிகள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சிறுதாவூர் மக்கள் கூறியதாவது:ஏற்கனவே சிறுதாவூர் ஏரியில் மண் எடுக்கும்போது சாலை சேதமாகி, அடிக்கடி விபத்துகள் நடந்தன. மேலும், 25 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், 28 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது சிறுதாவூர் வழியாக, திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணி, 50 சதவீதம்கூட நிறைவடைய வில்லை. அதற்குள், ஏரியில் மண் எடுக்கும் லாரிகள் இச்சாலை வழியாக சென்றால், சாலை சேதமடைந்து விபத்து ஏற்படும். எனவே, தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மண் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.இரு கிராம மக்கள் ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால், மண் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.