செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 10,000 ஏக்கர் நெற்பயிர்களும், 2000 ஏக்கர் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக் காலமான, கடந்த அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரை, மிதமான மழை பெய்தது.டிசம்பர் மாதம், காற்றழுத்த தாழ்வுநிலை, 'மிக்ஜாம்' புயல் காரணமாக, கனமழை பெய்தது. பின், மழை ஓய்ந்து, பனிப்பொழிவு ஏற்பட்டது. வானிலை மாற்றத்தால், தற்போது மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது.கடந்த 6ம் தேதி மிதமாக துவங்கிய மழை, நேற்று முன்தினம் மாலை 3:00 மணி முதல், மாவட்டம் முழுதும் பரவலாக பெய்தது.நேற்று காலை 6:00 மணி வரை, அதிகபட்சமாக, மாமல்லபுரத்தில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும், செய்யூரில் 9.8 செ.மீ., மதுராந்தகத்தில் 9.7 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 8.6 செ.மீ., கேளம்பாக்கத்தில் 7.6 செ.மீ., செங்கல்பட்டில் 7.1 செ.மீ., திருப்போரூரில் 5.8 செ.மீ., தாம்பரத்தில் 1 செ.மீ., என, மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் சராசரியாக 7.7 செ.மீ., மழை பெய்துள்ளது. நேற்றும் கனமழை நீடித்தது. மாமல்லபுரத்தில், கனமழையால் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகினர். மீனவர்களின் இயல்பு வாழக்கை முடங்கியது. திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றம் தாலுகாவில், பாப்பட்லா உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராகி வந்தனர்.நெற்கதிர் முற்றியிருந்த நிலையில், இரண்டு நாட்களாக பெய்த மழையால், பல நுாறு ஏக்கர் வயல்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன. பயிர் மூழ்கி, கொஞ்சம் கொஞ்சமாக அழுகி வருவதாக, இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருப்போரூர்
ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் - -தண்டலம் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சிறுபாலம் குறுகியதாக இருப்பதால், மழைக் காலத்தில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் உள்ளது.நேற்று பெய்த மழையால், மழைநீர் விரைவாக வெளியேறாமல், சாலை முழுதும் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்தனர்.எனவே, மேற்கண்ட பகுதியில், பெரிய அளவில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர்
செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில், பல ஊராட்சிகளில், முறையான கால்வாய் வசதி இல்லை.குறிப்பாக, சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வில்லிப்பாக்கம் காலனி பகுதி, சின்னகளக்காடி, பெருக்கரணை, சித்தாமூர் ஊராட்சி, வால்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.செய்யூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், 20,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரும் 7,000 ஏக்கர் பரப்பளவில் மணிலாவும் பயிரிடப்பட்டுள்ளன.இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் புதிதாக பயிரிடப்பட்ட மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மதுராந்தகம்
அச்சிறுபாக்கம், ஒரத்தி, ராமாபுரம், களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த, 700 ஏக்கருக்கும் மேற்பட்ட பி.பி.டி., மற்றும் பொன்னி ரக நெற்பயிர்கள், மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.மதுராந்தகம் ஒன்றியத்தில், சிலாவட்டம், பாக்கம், வில்வராயநல்லுார், சாத்தமை, படாளம், நெல்லி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 10 தினங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட நாற்றுக்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில், 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில், வேளாண் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அசோக்,வேளாண் இணை இயக்குனர்,செங்கல்பட்டு மாவட்டம்.
10,000 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வேம்பனுார் கிராமத்தில் உள்ள பல கோழிப்பண்ணைகளுக்கு உள்ளே மழைநீர் புகுந்ததால், தண்ணீரில் மூழ்கி, 10,000 த்திற்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் பலியாகின.இது குறித்து, கோழிப்பண்ணை உரிமையாளர் தயாளன் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக கோழிப்பண்ணை வைத்து, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். எதிர்பாராத விதமாக, நேற்று பெய்த கனமழையால், பண்ணைகளுக்கு உள்ளே தண்ணீர் புகுந்து விட்டது.அதனால், 15 நாட்கள் வயதுடைய, 7,000 கோழி குஞ்சுகள் உயிரிழந்தன.கோழி குஞ்சு, தீவனம், தடுப்பூசி என, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, இப்பகுதியில் பல்வேறு கோழிப்பண்ணைகளில் தண்ணீர் புகுந்து, ஏராளமான கோழி குஞ்சுகள் உயிரிழந்து உள்ளன.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பசு, கன்றுகள் பலி
மதுராந்தகம் அடுத்த புதுமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வரதம்மாள் என்பவர், தன் வீட்டின் அருகில் பட்டி அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று பெய்த கனமழைக்கு, பட்டியில் இருந்த கன்று குட்டி இறந்தது.இதேபோல், பெரும்பாக்கம் அடுத்த அகிலி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவரின் பசு மாடு, செய்யூர் அடுத்த ஆண்டர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவரின் கன்று குட்டி ஆகியவை, மழைக்கு பலியாகின என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
நோயாளிகள் வெளியேற்றம்
செய்யூர் பஜார் வீதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கட்டடம், சாலை மட்டத்தை விட தாழ்வாக இருப்பதால், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேறிய மழைநீர், மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து, நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.முன்னெச்சரிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக அருகே உள்ள அரசு பள்ளியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மற்ற நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாயிலாக மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 கூரை வீடுகள் இடிந்தன
மதுராந்தகம் அடுத்த பெருவேலி கிராமத்தைச் சேர்ந்த பலராமன் மனைவி கன்னியம்மாள், மேலகண்டை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி தேவி, மேலவளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன் மனைவி பூங்கொடி, சுரேஷ் மனைவி சித்ரா ஆகியோரின் கூரை வீடுகள், கன மழையில் இடிந்து விழுந்தன.இப்பகுதிகளை, மதுராந்தகம் தாசில்தார் ராஜேஷ் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து, கலெக்டருக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர். - நமது நிருபர் குழு -