மின் இணைப்பிற்கு ரூ.5,000 லஞ்சம் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது
வாலாஜாபாத், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30. இவர், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடில் வாங்கியுள்ள மனையில் வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின் இணைப்பு வழங்கக் கோரி, வாலாஜாபாத் ஊரக பிரிவு மின்வாரிய அலுவலகத்தை அணுகினார்.அப்போது, மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் ஜெயரவிகுமார், 48, 'மின்வாரிய உதவி பொறியாளர் பூபாலனிடம், 5,000 ரூபாய் கொடுத்தால், உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.லஞ்சம் தர விரும்பாத மணிகண்டன், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற மணிகண்டன், வணிக ஆய்வாளர் ஜெயரவிகுமாரை அணுகினார். அவர், உதவி பொறியாளர் பூபாலனிடம் அழைத்துச் சென்றார். பூபாலன் பணத்தை வாங்கினார்.அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், மின்வாரிய உதவி பொறியாளர் பூபாலன், வணிக ஆய்வாளர் ஜெயரவிகுமார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். பின் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.