ரூ.45 கோடியில் 42 நகரும் படிகள் 30 நிலையங்களில் அமைகிறது
சென்னை,மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியருக்காக, தேவையான வசதிகளை ஏற்படுத்தும் பணியில், அதன் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நிலையங்களில் ஒரு நகரும்படிகள் மட்டுமே உள்ளது. இதை, இரண்டாக அதிகரிக்க உள்ளோம்.அந்த வகையில், பயணியர் வருகை அதிகமாக வரும் 30 மெட்ரோ ரயில் நிலையங்களில், 42 நகரும் படிகள், 45 கோடி ரூபாயில் அமைக்க உள்ளோம்.கிண்டி, எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர், ஆலந்துார், கோயம்பேடு, டி.எம்.எஸ்., நந்தனம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இப்பணிகளை துவங்கி உள்ளோம்.அடுத்த மூன்று மாதங்களில், அனைத்து நகரும்படிகளும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.