| ADDED : ஜன 19, 2024 01:17 AM
மதுராந்தகம்:மாமண்டூர் அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ், 33; இவரது மனைவி சந்தியா, 27. காமேஷ் என்பவர் சென்னை, அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.பொங்கல் பண்டிகை முடிந்து தன் மனைவியுடன், நேற்று தன் 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில், வந்தவாசியில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது, மாமண்டூர் அடுத்த வடபாதி அருகே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது.இதில், நிலைகுலைந்து கீழே விழுந்த சந்தியாவின் மீது, அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காமேஷ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சந்தியா ஐந்து மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார், சந்தியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.