உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் புதிய பேருந்து நிலையம் கட்ட...ரூ.10 கோடி: நீண்டநாள் நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

செங்கையில் புதிய பேருந்து நிலையம் கட்ட...ரூ.10 கோடி: நீண்டநாள் நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணி துவங்கவுள்ளதால், நீண்டநாள் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில், செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் 1989ம் ஆண்டு, வாணிக வளாகம், பேருந்துகள் நின்று செல்லும் வகையில் கட்டப்பட்டது.இங்கிருந்து, காஞ்சிபுரம், மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையத்திற்கு தினமும், 300 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணியர் அமர இருக்கை வசதியில்லாததால், கர்ப்பிணியர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.பேருந்து நிலைய வளாகத்தில், கால்வாய்கள் உடைந்து துார்ந்து கழிவுநீர் வெளியே ஒடுகிறது. அந்த இடம், கொசுக்களின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால், பயணிகளுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் சூழல் உள்ளது.இதுமட்டும் இன்றி, நகராட்சி கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த பேருந்து நிலையம் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், புதிய பேருந்து நிலையம் கட்டித்தர வேண்டும் என, நகராட்சி தலைவர் தேன்மொழி மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து, அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.இதைத்தொடர்ந்து, கடந்த மார்ச்சில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி மானியக் கோரியின் போது, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது என, அமைச்சர் நேரு அறிவித்தார்.இதையடுத்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில், கீழ் தளத்தில் வாணிக வளாகம், முதல் தளத்தில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள் வந்து செல்லும் வகையில், புதிததாக கட்டடம் கட்ட, திட்ட அறிக்கை தயார் செய்து, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், கலெக்டர் மற்றும் அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளனர். இதற்கு, அனுமதி கிடைத்தபின் பேருந்து நிலைய பணிக்கு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புறநகர் பேருந்து நிலை பணி விறு விறு

செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. புறநகர் புதிய பேருந்து நிலையம் அமைக்க, 97 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. புதிய பேருந்து நிலைய பணி கடந்த 2023 ஆண்டு நவ., மாதம் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். போக்குவரத்து கழக பணிமனை, கடைகள் கட்டுமானபணி, நடைமேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணி முடிந்த பின், இங்கிருந்து தொலைதுார புறநகர் பஸ்கள் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !