செம்மஞ்சேரி,:சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, ஓ.எம்.ஆரில் இருந்து மகா நகர், ஜெவகர் நகர், எழில்முக நகர் நோக்கி செல்லும் சாலை, 3 கி.மீ., நீளம், 40 அடி அகலம் உடையது. ஆனால், 20 அடி சாலையாக உள்ளது.இதை, 40 அடி அகலமாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக, மகா நகர் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதற்காக, சாலையோர பள்ளத்தை நிரப்ப ஜல்லிக்கற்கள் கொட்டி சமன்படுத்தி, தார் கலவை போட்டு விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆனால், குளத்தில் இருந்து களிமண் அள்ளி, சாலை விரிவாக்க பகுதியில் கொட்டி நிரப்பப் படுகிறது. இதனால், விரிவாக்க பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலை உள்வாங்கி சேதமடையும். இது குறித்து பகுதிமக்கள், மண்டல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். எனினும், பணி நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், சாலை விரிவாக்கத்தால் எந்த பயனும் இல்லை என, பகுதி மக்கள் கூறினர்.இது குறித்து, மண்டல அதிகாரிகள் கூறியதாவது:சாலை பணிக்கு, களிமண் பயன்படுத்தக்கூடாது என, ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். அதையும் மீறி களிமண் பயன்படுத்தியது தெரியவருகிறது. மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் உத்தரவின்பேரில், ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.