| ADDED : ஜன 18, 2024 01:53 AM
சென்னை:இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் ஆந்திரா வளையப்பந்து கழகம் இணைந்து நடத்திய, 47வது சீனியர் தேசிய வளையப்பந்து சாம்பியன்ஷிப், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசாவில் நடந்தது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆண்களில் 45; பெண்களில் 24 அணிகள் பங்கேற்றன. குழு, ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.தமிழக ஆண்கள் அணி, குழு போட்டியில் புதுச்சேரி அணியை 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, வெண்கல பதக்கத்தை வென்றது. அதேபோல் பெண்கள் குழு போட்டியில், தமிழக அணி புதுச்சேரி அணியை 3 - 0 என்ற கணக்கில் வென்று, தங்க பதக்கத்தை கைப்பற்றியது.ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தமிழக அணியின் வைரமுத்து தங்க பதக்கத்தை வென்றார். பெண்களில், தமிழக அணியைச் சேர்ந்த ரம்யா வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில், தமிழக அணி கேரளாவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.இதே பிரிவில், பெண்களில் தமிழக அணியைச் சேர்ந்த தக்ஷிதா மற்றும் புனிதபிரியா ஆகியோர், ஆந்திர அணியினரை 2 - 0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றனர்.கலப்பு இரட்டையரில், தமிழத்தைச் சேர்ந்த ஜெயமாரிஸ் கண்ணன் மற்றும் மேனகா ஆகியோர், ஆந்திர அணியினரை 2 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, தங்க பதக்கத்தை வென்றனர்.