குரங்குகள் தொல்லை அதிகரிப்பு: திருப்போரூரில் மக்கள் அவதி
திருப்போரூர்: திருப்போரூர் குடியிருப்பு, கோவிலில், வணிக பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட பேரூராட்சி நிர்வாகம், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் ஓ.எம்.ஆர்., சாலை, நான்கு மாடவீதிகள், சான்றோர் வீதி, திருவஞ்சாவடி தெரு, வணிகர் வீதி உள்ளிட்டவற்றில் ஏராளமான வீடுகள், வணிக கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் நுழையும் குரங்குகள் சமையல் பொருட்கள், காய்கறிகள், உணவு வகைகளையும் பதம்பார்க்கின்றன. பகலில் கூட வீட்டை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில், பிரணவ மலைக்கோவில்களிலும் குரங்கு தொல்லை, குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பழங்கள், பூக்கள் விற்பனை செய்யும் கடைகளில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. வியாபாரத்தை விட்டு விட்டு, அவற்றை துரத்துவதே வேலையாகிறது. எனவே, திருப்போரூர் குடியிருப்பு, கோவிலில், வணிக பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட பேரூராட்சி நிர்வாகம், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.