மறைமலைநகரில் வழிப்பறி இருவருக்கு போலீஸ் காப்பு
மறைமலை நகர்:மறைமலைநகரில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் பொற்செல்வன், 23. இவர், சிங்கபெருமாள் கோவிலில் தங்கி வேலை பார்த்து வரும் நண்பரான ராகுல் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த கடனை திரும்ப கேட்க, கடந்த 8ம் தேதி சிங்கபெருமாள் கோவில் வந்தார். அப்போது, சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஸ்ரீவாரி நகரில், மர்ம நபர்கள் நான்கு பேர் பொற்செல்வனை தாக்கி, விலை உயர்ந்த,'சாம்சங் அல்ட்ரா' மொபைல் போன் மற்றும் 1,200 ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து பொற்செல்வன், மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கருநிலம் அடுத்த கரும்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்,30, மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்,29, மற்றும் அவரது நண்பர்கள் இருவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து விஜயகுமார், அஜித்குமாரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.