நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டுகோள்
செய்யூர்: நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாக்கம் கிராமம், பாரதியார் தெருவில் சாலை வசதி இல்லாமல், தெருக்கள் சகதியாக மாறுவதால் நடந்து செல்லும் பள்ளி மாணவ - மாணவியர், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. சாலை ஓரத்தில் தேங்கும் தண்ணீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆவதால், இரவு நேரத்தில் பொதுமக்கள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர். ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நெட்ரம்பாக்கம் ஊராட்சியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.