சென்னை: மாநில அளவிலான சதுரங்க போட்டியில், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சிறுவர் - சிறுமியர், முதலிடங்களை கைப்பற்றி அசத்தினர். ஸ்ரீ ஹயக்ரீவர் சதுரங்க அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டி, சேலையூரில் உள்ள ஸ்ரீ குகன்ஸ் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. போட்டி, 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் தலா எட்டு சுற்றுகள் வீதம், 'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கடலுார், உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 450 மாணவ - மாணவியர் பங்கேற்று விளையாடினர். எட்டு வயது பிரிவில், சிறுமியரில் சென்னை ஆராதனா, சிறுவரில் சென்னை விதேஷ்; 10 வயது பிரிவில் , சிறுமியரில் செங்கல்பட்டு லக் ஷிதா, சிறுவரில் செங்கல்பட்டு ஆதர்ஷ் அதீதன் ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர். அதேபோல், 13 வயது பிரிவில், சிறுமியரில் செங்கல்பட்டு தனிஷா, சிறுவரில் சென்னை சாய்ராம்; 25 வயது பிரிவில் பெண்களில் செங்கல்பட்டு பிரஷிஹா, சென்னை அரவிந்த்நாத் ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றி அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு, தாம்பரம் ஆயுதப்படை உதவி கமிஷனர் ராதாகிருஷணன், குகன் பள்ளியின் தாளாளர் ஜெயவந்தினி, முதல்வர் அலமேலு, அகாடமியின் நிறுவனர் கோகிலா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.