கிரீன்வேஸ் சாலை - அடையாறு இடையே 2வது சுரங்க பணி இந்த வாரம் முடியும்
சென்னை,'மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், பசுமை வழிச்சாலையில் இருந்து, அடையாறு ஆற்றின் கீழ் செல்லும் இரண்டாவது சுரங்கம் தோண்டும் பணி, இந்த வாரத்தில் முடியும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன. அதில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையில், 45.4 கி.மீ., வழிடத்தடத்தில் பணி நடந்து வருகிறது. இந்த தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் இருந்து, அடையாறு சந்திப்பு வரையிலான, 1.22 கி.மீ., துாரத்துக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த 2023 பிப்.,16ல் துவங்கியது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான 'காவிரி', இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரமான 'அடையாறு' ஆகிய இரண்டு இயந்திரங்கள், அடுத்தடுத்து சுரங்கப் பணிகளை துவங்கின. முதல் சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்து, 'காவிரி' இயந்திரம் கடந்த ஆண்டு செப்., 20ல் வெளியேறியது. இதையடுத்து, இதே தடதத்தில் மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரமும், கடந்த நவம்பரில் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அங்கு கடினமான பாறைகள் இருந்ததால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பசுமை வழிச்சாலை - அடையாறு சந்திப்பு இடையே, இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம், இந்த வாரம் இறுதியில் வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். அடையாறு ஆற்றின் சில பகுதிகளின் கீழ் கடினமான பாறைகளால், பணிகள் சவாலாக இருந்தது. இதனால், இரு மாதங்கள் தாமதம் ஆகியுள்ளன. இரண்டாம் கட்டத்தில் மொத்தமுள்ள 69 கி.மீ., சுரங்கப்பாதையில், தற்போது வரை 18 கி.மீ., துாரம் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். வரும் 2028ம் ஆண்டுக்குள், அனைத்து பணிகளும் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.