ஒளிராத உயர் கோபுர மின் விளக்குகள் இருளில் மூழ்கிய ஆத்துார் சுங்கச்சாவடி
அச்சிறுபாக்கம் : செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவில், அச்சிறுபாக்கம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.தென் மாவட்டங்களை செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கும், மிக முக்கிய பிரதான தேசிய நெடுஞ்சாலையான இதில், நாள்தோறும், 50,000த்திற்கும் அதிகமான வாகனங்கள், இரு மார்க்கத்திலும் கடந்து செல்கின்றன.இந்த சுங்கச்சாவடியில், சென்னை மார்க்கத்தில் ஐந்து வாகனங்கள் கடக்கும் வகையிலும், திண்டிவனம் மார்க்கத்தில் ஐந்து வாகனங்கள் கடக்கும் வகையிலும் என, மொத்தம் பத்து கடவுப்பாதைகள் உள்ளன.வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், இங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள், சில மாதங்களாக இரவில் எரிய விடப்படாமல், அணைத்து வைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சென்னை போன்ற நகரங்களில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சங்கச்சாவடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு செல்லும் மக்கள், சுங்கச்சாவடியில் வெளிச்சம் இல்லாததால், கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.சுங்கச்சாவடியில் பேருந்தில் இறங்கி சாலையை கடக்கும் பொதுமக்கள், சில நேரங்களில் விபத்துகளில் சிக்குவதாக, வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, விபத்துகளை தடுக்கும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர், இரவு நேரங்களில் உயர் கோபுர மின் விளக்குகளை எரிய விட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.